தடையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பி.எஃப்.ஐ., மாநில தலைவர்!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகம்மது ஷேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “மத்திய அரசு ஜனநாயக அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – Popular Front of India(PFI) அமைப்பைத் தடை செய்ததாக அறிவித்துள்ளது. இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத தடை அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த எல்லாச் செயல்பாடுகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக நடைபெறும் சோதனை மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

இதனிடையே, அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை கண்டித்தும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.