தலித் இளைஞர் மீது தாக்குதல்..!! நாற்காலியில் அமர்ந்தது ஒரு குற்றமா ?

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கபில்தரா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் ஹல்லு அஹிர்வார் (35) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு சென்ற அவர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

இதை கண்ட ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரோகித்சிங், தாக்கூர் ஆகியோர் ஹல்லுவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஹல்லுவுக்கு காயம் ஏற்பட்டது. பொது மக்கள் விலக்கிவிட்ட பிறகு ஹல்லு அங்கிருந்து சென்றார். பின்னர் அன்று மாலை 4.30 மணியளவில் தாக்கூர் 2 பேருடன் வந்து மீண்டும் ஹல்லுவை ஹாக்கி மட்டை கொண்டு சரமாரியாக தாக்கினார்.

இதில் மண்டை, கை, கால்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹல்லு போலீசாரிடம் கூறுகையில், ஆதிக்க சமூகத்தை சேர்ந்த தாக்கூர் தன்னை சாதி பெயர் சொல்லி அழைத்து இழிவாக பேசி தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் இதை போலீஸ் தரப்பு ஏற்க மறுத்து, முன்விரோதம் காரணமாக இந்த கைகலப்பு நடந்தது என்று கூறி வருகிறது.

நாற்காலியில் அமர்ந்த காரணத்துக்காக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.