பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாகியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, கோ லொக்கேசன் முறையில் இமாலய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பங்குச்சந்தையை பற்றி அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை ஆலோசகராக நியமித்து அவருக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கியது சர்ச்சை கிளப்பின.

கோ லொக்கேசன் முறைகேட்டில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் உள்ளிட்டோர் மார்ச் மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவருக்கும் கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தொடக்க நிலையில் ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது. இருவரும் மீண்டும் முறையீடு செய்திருந்த நிலையில், இன்று ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.