முக்கிய நிர்வாகிகளின் ராஜினாமா அறிவிப்பால் காஞ்சி மாவட்ட மதிமுக கலைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகவின் நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக மாவட்டச் செயலாளராக வளையாபதி, காஞ்சிபுரம் நகரச் செயலராக மகேஷ் உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரை வைகோ வயதானவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வளையாபதி, தான் கட்சியில் 28 ஆண்டுகளாக இருப்பதாகவும் தனக்கு வயதாகிவிட்டது என்றும் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து நகரச் செயலர் மகேஷ், ஒன்றியச் செயலர்கள், பல்வேறு நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஒரு சிலரை தவிர கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வளையாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் வைகோவின் தலைமையை மட்டுமே ஏற்றுள்ளோம்.

1993ல் வைகோமதிமுக தொடங்கியது முதல் அந்தக் கட்சியில் இருந்து வருகிறேன்.மாவட்டச் செயலர் என்ற அளவில் உயர்ந்துள்ளோம். தலைமை நிலைய செயலர் துரை வைகோ வயதானவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் நான் ராஜினாமா செய்தேன். வைகோ என்னிடம் மாவட்டச் செயலராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நான் வைகோவின் பேச்சை எப்போதும் மறுத்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் துணைப் பொதுச் செயலர் ராஜேந்திரன் 28 வருடம் உழைத்துள்ளீர்கள்.

இப்போது என்ன செய்துள்ளீர்கள் என்பதுபோல் பதிவு போட்டுள்ளார். இதனால் எங்கள் பதவியை ராஜினாமா செய்து எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

மாவட்டச் செயலர், நகரச் செயலர், ஒன்றியச் செயலர்கள், மாவட்டப்பிரதிநிதிகள் உட்பட ஒரு சிலரை தவிர்த்து பதவியை மட்டும் ராஜினாமா செய்துள்ளோம்.

ஆனால் கட்சியில் தொடர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது நகரச் செயலர் மகேஷ் உடன் இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.