நாட்டிலேயே இது முதன்முறை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெருமிதம்!

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த சோகையை போக்க இரும்பு பெண்மணி திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு கையேடுடன் கூடிய சீதனப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா 133 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் 72 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கினார்.

மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து குறைபாடை நீக்க சிறப்பு திட்டமான இரும்பு பெண்மணி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “பெண்களின் வாழ்வில் 10 மாத கர்ப்ப காலம் மிக முக்கிய காலமாகும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சமுதாய வளைகாப்பு நடை பெறுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பது முக்கியமில்லை. பெண்கள் ஆண்களை விட திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னனியில் இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் இரும்பு பெண்மணி திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. எனவே ரத்த சோகையை போக்க கொடுக்கும் இரும்பு சத்து நிறைந்த பொருட்களை தவறாமல் உண்ண வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இப்பொருள்கள் வழங்கப்படும். தமிழகத்தில் வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் நல்ல சத்தான, அறிவான ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து சமுதாயப் பணியாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.