ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, சென்னை பெண் உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் நேற்று அளித்த புகார் மனு: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரியின் ரூ.5 கோடி மதிப்புள்ள அட்டை கம்பெனி, சென்னை பட்டிமேட்டை சேர்ந்த தீப ஆனந்திக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான இடம், திருமங்கலம் மேலக்கோட்டை அருகில் உள்ள ரூ.3 கோடி மதிப்பிலான கெமிக்கல் கம்பெனி என அப்பகுதியில் உள்ளவர்களின் பலரது சொத்துக்களை போலியாக உயில் மற்றும் பத்திரங்கள் தயாரித்து வினோத்குமார் என்பவர் பதிவு செய்துள்ளார்.

இவரிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். மனுதாரர்கள் சார்பில் தீப ஆனந்தி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இதுபோல் பலரது சொத்துக்களை போலி உயில், பத்திரம் தயாரித்து பதிவு செய்துள்ள வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இதற்கு  துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை எஸ்பி சிவபிரசாத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.