ஜனாதிபதி குறித்து சர்ச்சை பேச்சு : காங்., பிரமுகருக்கு கண்டனம்| Dinamalar

புதுடில்லி :ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் உதித் ராஜுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர், ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு மட்டும், 76 சதவீதம்.

இதன் வாயிலாக, நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குஜராத் உப்பை சாப்பிடுகின்றனர் எனக் கூறலாம்’ என்றார்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ், இதை கடுமையாக விமர்சித்திருந்தர். ‘திரவுபதி முர்மு போன்ற ஜனாதிபதி, எந்த ஒரு நாட்டுக்கும் கிடைத்தது இல்லை. முகஸ்துதி பாடுவதற்கான உச்சத்தை கடந்து விட்டார். வாழ்க்கை முழுதும் உப்பை சாப்பிட்டு பாருங்கள்; அப்புறம் என்ன நடக்கிறது என தெரியும்’ என தெரிவித்திருத்தார். உதித் ராஜின் இந்த கருத்துக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பழங்குடியினரை அவமதிப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. காங்., லோக்சபா எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இப்படித் தான் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஏற்கனவே பேசினார்; அப்புறம் மன்னிப்பு கேட்டார். இப்போது உதித் ராஜ், ஜனாதிபதியையும், அவர் சார்ந்த பழங்குடியின மக்களையும் விமர்சித்துள்ளார். பழங்குடியினருக்கு எதிரான காங்கிரசின் மனப்போக்கு, இதன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வின் மற்றொரு செய்தி தொடர்பாளர் செஜாத் பூன்வால்லா கூறுகையில், ”ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் பேசிய உதித் ராஜை, கட்சியிலிருந்து நீக்க காங்., மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து உதித் ராஜ் கூறுகையில், ”நான் தெரிவித்தது, என் சொந்த கருத்து; காங்கிரசுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.