இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தசராவும் ஒன்று. இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாளில் ராவணனின் உருவ பொம்மையை எரித்துக் கொண்டாடுவார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்ப்பூரில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தாம்தரியிலுள்ள கௌஷாலா மைதானத்தில் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் ‘தகன்’ எனும் நிகழ்வு இரவு 8:15 மணியளவில் தொடங்கியது. அப்போது ராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். ஆனால் ராவணனின் உருவ பொம்மையிலுள்ள பத்துத் தலைகள் சரியாக எரியவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, ராவணனின் உருவ பொம்மையை தயாரிப்பதில் அலட்சியம் காட்டியதாக அந்த நகராட்சியைச் சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்ற கிளார்க்கை நகராட்சி ஆணையர் பணியிடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டிருக்கிறார். “இவருடைய தீவிர அலட்சியம் காரணமாகத்தான் ராவணனின் உருவ பொம்மை சரியாக எரியவில்லை. இதனால் நகராட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம்” என நகராட்சி ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.