மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும் – சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக மால்டா குடியரசு நாட்டின் அமைச்சர் ஜோ-எட்டியென் அபேலா தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மால்டா அமைச்சர் சந்தித்து பேசினார்.

சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லட்சம் பேர் முகாம்களில் பயனடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 3 குழந்தைகள், கெட்டுபோன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 200 இடங்கள் கிடைப்பதற்கு விண்ணப்பித்துள்ளோம். வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் இருந்து கூடுதலாக 50 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார் கூறும்போது, “மால்டா நாட்டு பல்கலை. மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மால்டா நாட்டு மருத்துவத் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, இங்குள்ள செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.