திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியில் 75 மாணவிகள் தங்கி அருகேவுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதி மாணவிகள் சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த மாதம் புகார் எழுந்தது.
அதனடிப்படையில், சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். இதையடுத்து, பழநி அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் உட்பட 4 பேரைக் கைதுசெய்தனர்.
இதற்கிடையே, “விடுதி முறையாக நடத்தப்படவில்லை. காப்பாளர், காவலாளியே மாணவிகள் தவறாக நடக்க உடந்தையாக இருந்திருக்கின்றனர். விடுதி காப்பாளர், காவலாளி விடுதிக்குச் சரியாக வருவது இல்லை. விடுதி கட்டுபாடின்றி யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற நிலை நிலவுகிறது” என்ற புகாரின் அடிப்படையில் விடுதி காப்பாளர், காவலாளி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் விடுதி மாணவிகள் 50 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்ட விடுதி காப்பாளரை மீண்டும் அதேவிடுதியில் பணியமர்த்தக்கோரி பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
அங்கு வந்த போலீஸார் மற்றும் பாதுகாவலர் நலத்துறை தாசில்தார் மங்கல பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாணவிகளை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அவர்களிடம் விசாரணை முடிந்தபிறகு விடுதி காப்பாளர் பணியமர்த்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.