சட்டமன்றமே எங்களை அங்கீகரித்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், எம்எல்ஏக்களின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சபைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமைந்தார். சட்டசபையில் இன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிவடைந்த பின் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவைக் கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக சார்பாக எங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். எம்ஜிஆர், தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை தொடங்கி மூன்று முறை முதல்வராக இருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்று, முதல்வராகவும் பொறுப்பேற்று ஆட்சி செய்தார். அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக.
சட்ட விதி, அடிபிறழாமல் கட்டிக்காத்த மாண்பு, பலநூறு ஆண்டுகளானாலும் சட்டவிதியை எந்தவித மாசுவும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம். தொண்டர்கள்தான் அதிமுகவின் அடித்தளம்; ஆணிவேர். சட்டமன்றமே எங்களை அங்கீகரித்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன்” என்றார்.