ஏன் குரங்கு போல வரீங்க..? பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சித்த அண்ணாமலை..

தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 60 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வேண்டும் என்பதற்கு தான். ஆங்கிலத்தை தமிழ்நாட்டு மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்தியை திமுக எதிர்க்கிறது.

திமுக ஒரு பித்தலாட்ட கட்சி என்றும் தமிழை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி திமுக என்றும் கடுமையாக அண்ணாமலை விமர்சித்து பேசினார். அதனை தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள்தான் என்று கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்க மறுத்த அண்ணாமலை செய்தியாளர்களை பார்த்து, ”ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.” என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என்றார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு ஊடகத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.