ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று உள்துறை சார்பில் நடைபெற்ற சிந்தன் ஷிவிர் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய  பிரதமர்  மோடி வலியுறுத்தினார். மேலும், ‘துப்பாக்கி வைத்திருந் தாலும், பேனா வைத்திருந்தாலும்’ நக்சலிசத்தை வேரோடு பிடுங்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் எந்தத் தகவலையும் அனுப்பும் முன், 10 ஆதாரங்களைச் சரிபார்க்க மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அரியானா மாநிலம்  சூரஜ்கண்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்காக 2நாள் சிந்தனை முகாம் (‘சிந்தன் ஷிவிர்’) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  நேற்று தொடங்கியது. நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா 024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு ( NIA ) கிளைகள் அமைக்கப்படும் என கூறினார்.

இன்றைய 2வது நாள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்கள், 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,  “அரசியல் சாசனப்படி சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதையுமே குறிக்கிறது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்புகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். அதேபோல், அந்த அமைப்புகள் குறித்த பொதுமக்களின் பார்வையும் மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களில் இருந்து ஊக்கம் பெற வேண்டும். ஒரு மாநிலத்தின் சிறப்பான நடைமுறையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் எது சிறந்த நடைமுறையோ அது நாடு முழுவதற்கும் இருக்கும். மக்களுக்கு அதிகாரங்களை அளிப்பதில்தான் ஒரு நாட்டின் வலிமை அடங்கி இருக்கிறது. அத்தகைய அரசுதான் சிறந்த அரசு. நாட்டின் கடைக்கோடி மனிதனும் அதிகாரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை உள்துறைக்கு இருக்கிறது.

குற்றங்கள் எப்போதும் உள்ளூர் அளவிலானதாக மட்டும் இருப்பதில்லை. பல மாநிலங்கள் தொடர்புடைய, பல நாடுகள் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையேயும் மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையேயும் முழுமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம்.

சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே, தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவிக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல் சீருடை இருப்பது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராகவும், நிதி மோசடி குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலி செய்திகளை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். ஏனெனில், ஒரு தவறான செய்தி மிகப் பெரிய குழப்பத்தை, பாதிப்பை ஏற்படுத்திவிடும். அனைத்து வகையான நக்ஸல் தீவிரவாதமும் ஒடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கியுடன் வந்தாலும் அல்லது பேனாவுடன் வந்தாலும் அத்தகைய சக்திகள் இளைஞர்களை தவறாக வழிநடத்த அனுமதித்துவிடக் கூடாது.

இவ்வாறு பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.