தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:- “அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், நவம்பர் 1-ந் தேதி தொடங்கும் விண்ணப்ப பதிவு நவம்பர் 11-ந் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் முன்பு விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, மேலும் விவரங்கள் அறிவதற்கு சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.