உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியில் உள்ள நாக்லா கன்ஹாய் கிராமத்தில் சிவானந்தன்-ராம்மூர்த்தி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்தனர். சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங் காலையில் அவருடைய வீட்டை பார்வையிடுவதற்காக வந்திருக்கிறார். அப்போது அவருடைய மனைவி ராம்மூர்த்தி அனைவருக்கும் டீ போட்டு கொடுத்தார், அதே நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரும் வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, ராமமூர்த்தி தான் போட்ட டீயை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
டீயைக் குடித்த சில நிமிடங்களுக்குப் பிறகு ஐந்து பேரும் ஒருவர் பின் ஒருவராக சுயநினைவை இழக்கத் தொடங்கினர். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் சிவானந்தனின் குழந்தைகளும், உறவினரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும் பக்கத்து வீட்டுக்காரரும், சிவானந்தனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிவானந்தனின் மனைவி ராம்மூர்த்தியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெல் பயிருக்கு தெளிக்க பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை டீ தூள் எனத் தவறாக நினைத்து டீ போட உபயோகப்படுத்தியதாகத் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.