இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து மீண்டும் பாராட்டி பேசினார் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து ஆளும் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பதவி விலகினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஷெப்பாஸ் ஷரீப் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று (28.10.2022 ம் தேதி) லாகூரிலிருந்து, இஸ்லாமாபாத் வரை தனது கட்சி ஆதரவாளர்கள் பல்லாயிரகணக்கானோருடன் பிரம்மாண்ட பேரணியை துவக்கினார். அப்போது இம்ரான் கான் பேசியது,
நாட்டை பாதுகாக்க வலுவான ராணுவம் தேவை. பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு பலவீனமடைவதை நான் விரும்பவில்லை. இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறது.
இது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை காட்டுகிறது. இதனை தான் பாகிஸ்தானில் நான் பார்க்க விரும்புகிறேன். நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இம்ரானை கைது செய்ய திட்டம்
இன்று பேரணியை துவக்கியுள்ள இம்ரான்கான், நவ.4-ம் தேதி இஸ்லமாபாத்திற்கு நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இம்ரானின் பேரணிக்கு அரசு அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை லாகூரிலேயே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement