இந்த மழைக்கும் ஒரு இடத்துல கூட பவர் கட் இல்ல… அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை, கே.கே.நகர் துணை மின்நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு துணைமின் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றி மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பாக பணியாற்றிடவும் அறிவுரை வழங்கினார்கள்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மின்சார துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் கண்டயறியப்பட்டு இந்த ஆண்டு பாதிப்புகள் இல்லாத வகையில் அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன 10 துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகளின் அமைவிடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

சீரான மின்விநியோகம் செய்வதற்கு வசதியாக, கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 2,700 பில்லர் பாக்ஸ்கள் தரையிலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தி சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேர் பணியிலும், இரவு நேரங்களில் 600 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாநகரில் மொத்தமுள்ள 1,800 பீடர்களில் ஒன்றில்கூட மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை. மாநகரின் எல்லா பகுதிகளிலும் 100 சதவீதம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்றிரவு மட்டும் இரண்டு இடங்களில் மின்விநியோகம் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து சில நிமிடங்களில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.

வடகிழக்கு பருவமழையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 18,380 மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளன.. இதே போல 1.5 இலட்சம் மின்கம்பங்கள் உள்ளன. கூடுதலாக 50,000 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 இலட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

எனவே மின்விநியோகத்தை பொறுத்த வரைக்கும் தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்றும், இன்றும் பெய்த மழையால் எவ்வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 40,000 மின்கம்பங்கள் மழைக்கு முன்னதாகவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாநிவம் முழுவதும் சாய்ந்த நிலையிவ் இருந்த 31,500 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. மின்கம்பிகளை பொறுத்தவரை 1,800 கீ.மீ அளவிற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்கரை பகுதிகளாக இருந்தாலும் சரி; சென்னையாக இருந்தாலும் சரி. சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ்லக்கானி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் .ஏ.எம்.வி.பிராபகர்ராஜா, இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.