உலகில் அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எந்தவிதமான இயலாமைக்கும் ஆளாகாமல் இருப்பதற்கு, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கொடை மற்றும் ஆண்டு வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயிலிருந்து நான்கு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.