கன்னியாஸ்திரிகள் அறையில் தங்கி இருந்த நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பெருமலை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா மகள் இந்துஜா(18). இவர், வேதாரண்யம் அருகே கடினல்வயல் பகுதியில் தங்கி தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு 14 மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில் 13 பேர், தினமும் வீட்டிலிருந்து வந்து செல்கின்றனர். இந்துஜா மட்டும் ஏழ்மை காரணமாக பயிற்சி கல்லூரியில் உள்ள கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள அறையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி கழிவறையில் தாவணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘அப்பா குடிக்காதே, அம்மாவை அடிக்காதே நான் உங்களுக்கு என்னென்னவோ செய்ய நினைத்திருந்தேன். என்னால் முடியவில்லை. எல்லாம் அண்ணன் பார்த்துக்கொள்வான்’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவியின் சாவில் சதேகம் இருப்பதாக உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மருத்துவர்கள் மூலம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.