கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியில் மழையில் குடைபிடித்தபடி கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்றனர்.
உள்ளாட்சித் தினத்தை ஒட்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் செல்வராணி தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. திறந்தவெளியில் நடைபெற்றக் கூட்டத்தில் மக்கள் நலப்பணியாளர் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். அப்போது மழை பெய்யத் துவங்கியதால் கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
அப்போது ஊராட்சி நிதி ஒதுக்கீடு தொடர்பாக சின்னதுரை பேச முயன்றபோது, ஊராட்சித் துணைத் தலைவர் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டி பல மாதங்களாகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வராதது ஏன் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் செயல்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
சிறப்புக் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு ரூ.5 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அந்த நிதியை பயன்படுத்தி ஏன் துணிப் பந்தல் அமைக்கவில்லை எனவும், வந்திருந்த கிராம மக்களுக்கு தேநீர் சிற்றுண்டி கூட வழங்கவில்லை என கிராம மக்கள் புகார் கூறியது குறித்து, தலைவர் செல்வராணியிடம் கேட்டபோது, “நான் பட்டியலின பெண் தலைவர் என்பதால், துணைத் தலைவர் எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பெற கூட அவர் கையெழுத்திட மறுக்கிறார்” என தெரிவித்தார்.