இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் நிலையில், அதில் அதிகமாக பாதிக்கப்படுவது என்றால் ஆதரவற்று பொதுவெளியில் அலையும் தெருநாய்கள்தான். அந்த வகையில், மும்பையில் தெரு நாய்க்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமை அன்று (அக். 29) கொடுத்த புகாரை தொடர்ந்து, 28 வயதான இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினு சேத், ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வீடியோவில், கைது செய்யப்பட்ட இளைஞர் தெருநாயை பாலியல் வன்புணர்வு செய்தது பதிவாகியிருந்தது. இதனால்தான், போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்தனர்.
பிறந்து ஆறு மாதமே ஆன அந்த தெருநாய், மும்பையின் பவாய் நகரில் உள்ள பிரபல மால் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. அங்குள்ள பார் மற்றும் உணவக பணியாளர்கள் அந்த நாயை பராமரித்து வந்துள்ளனர். அந்த மால் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த விலங்கு நல ஆர்வலரான மினு சேத்திடம் அந்த கொடூர சம்பவம் அடங்கிய வீடியோவை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, மினு சேத் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் என்றும் கூறப்படுகிறது.
அந்த நாயிடம் கைது செய்யப்பட்ட இளைஞர் பல நாள்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை உணவு டெலிவரி செய்யும் சக பணியாளர் ஒருவர் நேரில் பார்த்ததை அடுத்து, அவரது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். போலீசார் அந்த இளைஞரை ஐபிசி 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தது.
மும்பை பவாயில் இதேபோன்று, கடந்தாண்டு ஒரு நாயை வேறொரு இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமின்றி, அதன் பிறப்புறுப்பில் குச்சியை திணித்து சித்ரவதை செய்த சம்பவமும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.