புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சவுந்தர் அடங்கிய அமர்வு, கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதால், அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பளித்து உள்ளது.
சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது எனவும் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தொழிற்பூங்கா அமைக்க 2010 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை மீண்டும் நிர்ணயித்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.