புதுடில்லி: உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் எனவும், 2027ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என கணித்திருந்தது.
நாளை (நவ.,15) வரவிருப்பதால் இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே, உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்து விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தற்போது சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. 2027ல் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2050ல் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ல் 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை, 2030ல் 850 கோடியையும், 2050ல் 970 கோடியையும், 2080ல் 1040 கோடியையும் எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement