விஜய் ஹசாரே தொடர்: தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை

புதுடெல்லி

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்திச் செய்துள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்துள்ளார்.

இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.

ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.