மத சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்தி வைப்பு: கண்டிக்கும் வைகோ

சென்னை: மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு தொடர்பாக பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் மதிமுக தலைவர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள்வரை ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ அவர்கள்.

இந்த உதவித் தொகை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனி கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு தொடங்கி, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்குக் கிடைத்து வந்த ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை இனி கிடைக்காது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று வருத்தம் தெரிவித்திருக்கும் வைகோ, சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசின் அநியாயமான தாக்குதல் நடவடிக்கையே இது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை மறுமலர்ச்சி தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் மீதும் இந்தத் தாக்குதல் நாளை தொடரலாம் என்ற அச்சம் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 

கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறும் மறுமலர்ச்சி தி.மு.க தலைவர் வைகோ, தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், பிற மாநில முதல்வர்களும், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போர்க்குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்ன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.