தமிழ்த் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான முன்னணி பன்மொழி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார்.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘மகாநதி’ திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அதை கீர்த்தி சுரேஷ் மறுத்தார்.
இப்போது, மீண்டும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தி சுரேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மூதாதையர் வீட்டிற்கும், அங்குள்ள குலதெய்வ கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது. திருமண செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.