
பனியால் தடைபட்ட ஷோபனாவின் கேதார்நாத் தரிசனம்
எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் இது நம்ம ஆளு, தளபதி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒரு கட்டத்தில் நடிப்பை குறைத்துக் கொண்டு நடனத்தில் ஆர்வம் செலுத்தி நடனப்பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கேதார்நாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷோபனா அங்கே திடீரென பனி மூடிய காரணத்தால் கேதார்நாத் தரிசனம் செய்ய தடை ஏற்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “இதோ நீங்கள் தூரத்தில் பார்க்கும் தங்கப்புள்ளி போல தெரிவதுதான் கேதார்நாத் கோவில்.. ஹெலிகாப்டர் எங்களை அழைத்துச் செல்ல வந்தும் அதிக பனியின் காரணமாக எங்களது பயணம் தடைபட்டு நிற்கிறது. ஒரு ரிப்போர்ட்டர் போல இப்போது உங்களுக்கு நான் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஷோபனா.
தடைபட்ட பயணத்தை பனி விலகியதும் மேற்கொண்டாரா அல்லது அங்கிருந்தபடியே திரும்பி விட்டாரா என்பது பற்றி எந்த தகவலையும் அடுத்ததாக அவர் குறிப்பிடவில்லை.