இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணம் மேற்கொண்ட இருவர், கீழே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவின்(19), மற்றும் ஹரி(17), இருவரும் நேற்று முன் தினம் தரமணி 100 அடி சாலையில், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அதிவேகமாக 112 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளனர். பிரவின் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஹரி செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார்.
தரமணி சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று திரும்ப(யூடர்ன்) முயன்றநிலையில், அந்த வாகனத்தில் இடித்து விடக்கூடாது என்பதற்காக இருசக்கர வாகன வேகத்தை கட்டுப்படுத்த முயன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தனர். இதில் நிகழ்விடத்திலேயே பிரவின் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
ஹரியை மீட்ட போலீசார் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வாகனத்தை ஓட்டி வந்த பிரவின் என்பவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதிவேக பயணம் நொடியில் மரணம் என எத்தனை வாசகங்களை பார்த்து படித்தாலும் பதின்பருவ இளைஞர்கள் சாகசங்களை மேற்கொள்வதை கைவிட வேண்டும் இல்லையென்றால் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியாது. சம்பவம் தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
