மிரட்டும் மாண்டஸ் புயல்… இன்று இரவு பேருந்துகள் இயங்காது – போக்குவரத்துத்துறை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதீத தீவிர புயலாக சென்னையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.