மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி வரை அதி தீவிர புயலாகவே நீடிக்கும். மேலும், நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.