இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

சிம்லா:
மாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது.

தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது. பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இந்த நிலையில் இன்று சிம்லாவில் பதவியேற்பு விழா நடந்தது. இமாச்சல பிரதேச முதல்வராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சிம்லாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.