தமிழில் தனது பயணத்தை ஆரம்பித்தாலும் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். அவரது பிரிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் ஆட்டம் காணும் என பலர் ஆரூடம் கூற அதையெல்லாம் தவிடுபொடியாக்கும்விதமாக புஷபா படத்தின் பாடல், ஹாலிவுட் எண்ட்ரி என அதகளம் செய்தார் சமந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென அவருக்கு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் வந்தது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏறபடுத்தியது.
இருப்பினும் மனம் தளராத சமந்தா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு ஹைதராபாத் வந்த அவர் அங்கும் சிகிச்சை செய்துகொண்டார். மேலும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் மனம் தளரமாட்டேன் என உருக்கமாகவும் உறுதியாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏகன் படத்தில் நடித்திருந்த பியா பாஜ்பாய் சமந்தாவின் உடல்நலம் குறித்து பேசுகையில், “சமந்தாவின் உடல்நிலை பற்றி எனக்கும் நன்றாக தெரியும். நானும் இதுபோன்ற ஒரு கடினமான் சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன். 2015ஆம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் இருந்தபோதுதான் எனக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது.
படப்பிடிப்பிற்காக உடற்பயிற்சியில் இருந்தபோது எனது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல இருந்தது. நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தூங்கிவிட்டேன். ஆனால், காலையில் எழும்பும்போது இடது காலிலும் அப்படி வலி ஏற்பட்டது. அப்போது என்னால் உட்காரவோ எழுந்து நிற்கவோ ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதன்பிறகுதான் அவசர அவசரமாக மருத்துவமனை சென்றேன்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர்தான், அது தசை நார் அழற்சி நோய் என்பதே தெரியவந்தது. இருந்தாலும் அதனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சென்று பரிசோதித்தேன். ஆனால், அப்போது அது மயோசிடிஸ் இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், அந்த நேரங்களில் நான் அனுபவித்த வேதனைகள் கொஞ்சம்நஞ்சமல்ல. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதுதான் சமந்தா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது” என பேசினார்.