திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாம்பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்த ரவளி என்ற பெண்ணுக்கும், மென் பொறியாளரான சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு ரவளி சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் அதிகாலை 4 மணிக்கு ரவளி திருமணத்திற்கு வாங்கிய பட்டுப்புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து கதறி அழுத பெற்றோர், நவிபேட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் ரவளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிஜாமா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்தபின் மணமகன் சந்தோஷ் தொலைபேசியில் ரவளியை கொடுமை செய்ததாக ரவளியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பின் நீ வேலைக்கு போக வேண்டும், உங்கள் குடும்ப சொத்தில் உனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரவளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர்.
newstm.in