பிரபல சீரியல் நடிகை வீணா கபூரை அவரது சொந்த மகனே அடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் வசித்து வந்த வீணா கபூர் (74) பாலிவுட்டின் பழம்பெரும் சின்னத்திரை நடிகை. இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இவர் தனது இரண்டாவது மகனான சச்சினுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகன், இவருக்கு போன் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த அவர், பக்கத்து வீட்டாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீணா இல்லை என்பதால், காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வந்து இளைய மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, தனது தாயை தானே கொன்றதாக அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
வீணா கபூருக்கு சுமார் 12 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அதனை தனது பெயருக்கு மாற்றி தரும்படி அவரது மகன் சச்சின் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த மகன், தனது வயது முதிர்ந்த தாயை பேஸ்பால் மட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
அவரும், அவரது வீட்டில் வேலை செய்யும் மண்டல் என்பவரும் சேர்ந்து சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்து காரில் எடுத்து சென்று சுமார் 90 கி.மீ., தொலைவிலுள்ள ஆற்றில் தூக்கி வீசினர்.
இதனையடுத்து போலீஸார் வீணாவின் மகன் சச்சினையும், அவருக்கு துணையாக இருந்த மண்டல் என்பவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
newstm.in