மாண்டஸ் புயலில் மாண்டவர்களின் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு? -அமைச்சரின் அப்டேட் இதுதான்!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அ்பபோது அவர் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மாண்டஸ் புயல், மழையின் விளைவாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 98 கால்நடைகளும் இறந்துள்ளன. 138 குடிசைகள், 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதடைந்துள்ளன.

மேலும், புயல் பாதிப்பால் 40 விசைப் படகுகள், 24 படகுகள், இரண்டு பைபர் படகுகள் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய இழப்பீடு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

மாண்டஸ் புயல், மழையின் விளைவாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இந்த இழப்பீட்டு தொகையை அதிகரித்து அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

முன்னதாக, புயல் நிவாரணம் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறும்போது, “சென்னை காசிமேட்டில் புயல் காற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.32 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

ஃபைபர் படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் அவற்றிற்கு ரூ.75 ஆயிரம் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.இதுபோல் இயந்திரப் படகுகளுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, “மாண்டஸ் புயலின் விளைவாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால், அவர்களால் குறைந்தபட்சம் இன்னும் 10 நாட்களுக்கு தொழிலுக்கு போக முடியாது. அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் 20 நாட்களாவது ஆகும். அதுவரை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீனவர்கள் சங்கம் மூலமாக அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க திமுக அரசு முன்வர வேண்டும்” அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.