திருமலை: வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மகாபலிபுரம்- ஸ்ரீ ஹரிகோட்டா மத்தியில் கரையை கடந்தது. இதன் காரணமாக ேநற்று முன்தினம் மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும், சில மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தென் ஆந்திராவில் உள்ள நெல்லூர், திருப்பதி, சித்தூர், கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
திருப்பதி திருமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குளிர்காற்றுடன் மழை பொருட்படுத்தாமல் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் நேற்று மதியம் முதல் மண்சரிவு ஏற்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து தரைப்பாலத்தில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றது. மேலும், அலிபிரி சோதனையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மண்சரிவு மற்றும் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.