நடந்துமுடிந்த எம்சிடி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. சுமார் 15 வருட காலமாக டெல்லி மாநகராட்சி பாஜகவின் கையில் இருந்து வந்த நிலையில், இந்த தேர்தலில் பாஜகவின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜகவின் மாநில தலைவர் ஆதேஷ் குப்தா பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு டெல்லி பிரிவு துணைத் தலைவர் வீரேந்திர சச்தேவா செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, டெல்லி பாஜகவின் தலைமை மாற்றத்திற்கான கூச்சல் கட்சியின் ஒரு பிரிவினரிடையே அதிகரித்து வருகிறது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் நடந்துள்ளன. ஒரு எம்சிடி இடைத்தேர்தல், இரண்டாவது ராஜீந்தர் நகர் விதான் சபா இடைத்தேர்தல், மூன்றாவது எம்சிடி தேர்தல் என அனைத்திலும் கட்சி தோல்வியடைந்துள்ளது கட்சி தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது என்றார்.
ராஜினாமா குறித்து குப்தா கூறுகையில், நாங்கள் நல்ல முறையில் போராடினோம், எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டோம் என்பது தான் உண்மைதான் என்று அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM