மின் கட்டணம் 10 மடங்கு உயர்வு… 2024 தேர்தலில் திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்!

500 வாக்குறுதிகள்:
2021 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்திருந்த 500 வாக்குறுதிகளில், ‘குடியிருப்புகளுக்கான மின் கட்டண கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்றிருப்பது மாதம் ஒரு முறை என மாற்றி அமைக்கப்படும்’ என்ற வாக்குறுதி மிகவும் முக்கியமானது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓன்றரை ஆண்டுகளிலேயே கிட்டதட்ட 200 வாக்குறுதிகள் நிறைவேற்றுப்பட்டுவிட்டதாக மேடைக்கு மேடை பெருமை பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இரண்டு நாட்களுக்கு ஒன்று என புயல் வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் திமுக அரசு, மின் கட்டண கணக்கீடு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற மிக முக்கியமான வாக்குறுதியை மட்டும் இதுநாள்வரை நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வி வெகுஜன மக்களை தாண்டி, திமுக உடன்பிறப்புகள் சிலர் மத்தியிலுமே எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு திமுக கொடுத்த ஷாக்:
விடை தெரியாத இந்த கேள்வி ஒருபுறம் இருக்க, ‘நாங்கள் சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்’ என்ற உடன்பிறப்புகளின் மத்தியி்ல் பிரபலமான தமது பஞ்ச் டயலாக்கின்படி, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத, மின் கட்டணத்தை உயர்த்தி திமுகவுக்கு ஓட்டு போட்ட வாக்காள பெருமக்களையும் சேர்த்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வேறு வழியில்லாமல் மின் கட்டணம் உய்ர்த்தப்படுகிறது என்று சில மாதங்களுக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிட்டு, தன்நிலை விளக்கமும் அளித்திருந்தார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

யூனிட் 8 ரூபாய்:
நிலக்கரி இறக்குமதி உள்ளிட்ட மின் உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு, மத்திய அரசின் அழுத்தம் என, மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு சொல்லும் காரணங்களைகூட தங்களால் புரிந்து கொள்ள முடிவதாக கூறும் மின் நுகர்வோர், ஆனால் மின்கட்டண உயர்வு விகித்தையும், குறிப்பாக மின்மோட்டார், மின் விளக்கு போன்ற குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை வர்த்தக பயன்பாட்டுக்கான (Commercial usage) கட்டணத்தின் அளவுக்கு யூனிட்டுக்கு 8 ரூபாய் என்று உயர்த்தி உள்ளதை தங்களால் எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள இயலாது என்கின்றனர் கோபத்துடன் அவர்கள்.

இந்த லிஷயத்தில் அரசின் மீதான தங்களின் கோபம் 200% நியாயமானது என்கிறனர் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள். தங்களது கோபத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, ஆகஸ்ட் மாதம் வரையில் , பொதுப் பயன்பாட்டுக்கு தாங்கள் செலுத்தி வந்த மின் கட்டணத்தை. அக்டோபர், டிசம்பர் மாத (மின் கட்டண உயர்வுக்கு பின்) மின் கட்டணத்துடன் ஒப்பீட்டு காட்டி வருகின்றனர் அவர்கள்.

10 மடங்கு உயர்வு:
உதாரணமாக, வீட்டு பொதுப் பயன்பாட்டுக்கு 200 யூனிட் மின்சாரத்தை உபயோகித்து வந்த வீட்டின் உரிமையாளர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வெறும் 150 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களே தற்போது (டிசம்பர் மாத மின் கணக்கீடு) வெறும் 210 யூனிட் பொதுப் பயன்பாட்டுக்கான மின் உபயோகத்துக்கு 1680 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டணம் கிட்டதட்ட 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு இணையாக யூனிட்டுக்கு 8 ரூபாய் என பகல் கொள்ளை போல மின் வாரியம் வசூலிப்பதால்தான் மின் கட்டணம் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்பதே வீட்டு உரிமையாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

10 ஆண்டுகள் கழித்து திமுக மீ்ண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வாக்களித்த தமிழக மக்களுக்கு ஸ்டாலின் செய்துள்ள ஆகச்சிறந்த கைமாறு இதுதான் என்ற ஆதங்கப்படும் மின் நுகர்வோர், ஒரேயடியாக அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை தமிழக அரசு கூடிய விரைவில் குறைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் என எதிர்வரும் எல்லா தேர்தல்களும் திமுகவு்க்கு ஷாக் ட்ரீட்மென்ட்டை தமிழக வாக்காளர்கள் கொடுக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கின்றனர் அவர்கள்.

வரவாறு திரும்ப வாய்ப்பு:
2006-11 இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்த மின்வெட்டே, 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது ஏற்பட்ட தொடர் மின்வெட்டால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், தொழில்முனைவோர் என பலதரப்பினரும் பாதிக்கு ஆளாகினர். குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கொங்கு மண்டலம், அப்போதைய திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

2011, 2014, 2016 என அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலித்த அதன் எதிர்விளைவுகள், திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, செந்தில் பாலாஜி மூலம் இப்போதுதான் திமுக கொஞ்சம், கொஞ்சமாக மீட்டெடுதது வருகிறது. அதேசமயம், மின் கட்டண உயர்வால் கொங்கு மண்டலம் மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் திமுக தமது செல்வாக்கை இழக்கும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு ஸ்டாலி்ன் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் திமுக நலவிரும்பிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.