ரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை

கீவ்,

தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரான் வழங்கிய ஷாஹெட்-136 ட்ரோன்களைக் கொண்டு 2 மின் நிலையங்களை ரஷிய படைகள் தாக்கியதால், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒடேசாவில் நிலைமை மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒடேசாவில் மின்சாரத்தை மீட்டெடுக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்த ஜெலென்ஸ்கி, சேதமடைந்த மின் கட்டமைப்புகளை முழுமையாக சீரமைக்க 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.