வாரணாசியில் பாரதியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம்… திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நூற்றாண்டையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. 

வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியாா் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 2.5 அடி உயரம் உள்ள சிலையும் நிறுவப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

மேலும், பாரதியார் குறித்த சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.