நள்ளிரவில் அஜித் ரசிகர்கள் வெறியாட்டம்: சேலத்தில் நடந்த அவலம்!

சேலத்தில் ஏ ஆர்ஆர் எஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். திரையரங்கிற்குள் கூட்டத்தில் சிக்கி அஜித் ரசிகர் ஒருவரின் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ARRS மல்டிப்ளக்ஸ் திரையரங்கு முன்பு கூடினர். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ரசிகர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்தனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த காரின் மீது ஏரியும், மேலே எழும்பி வெடிக்கும் பட்டாசுகளை தலை மேல் வைத்து வெடித்தும் அஜித் ரசிகர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.

நேரமாக ஆக திரையரங்கின் கேட் திறக்கப்படாததால் அஜித் ரசிகர்கள் கேட்டின் மீது ஏறி திரையரங்குக்குள் நுழைந்தனர். அப்போது உற்சாக மிகுதியில் திரையரங்கில் இருந்த கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

கண்ணாடியை உடைத்த போது அஜித் ரசிகர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கூட்ட நெரிசல் சிக்கிய அஜித் ரசிகர் ஒருவரது வலது கால் முறிந்தது. வலியில் துடித்த அந்த நபரை சக ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது மது போதையில் இருந்த அந்த நபர் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என முழங்கியபடியே கதறி துடித்தார். இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அந்த நபரை ஏற்ற முயன்ற போலீசாரை தொடவிடாமல் அந்த நபர் தல அஜித்தை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என கதறிய படியே தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அவரது நண்பர்கள் குண்டு கட்டாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே திரையரங்கிற்கு வெளியே இரு சக்கர வாகனத்தில் அதிகம் சத்தம் எழுப்பி அட்ராசிட்டி செய்த அருண் என்ற வாலிபரை போலீசார் பிடித்து தாக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். பொதுவாக புதிய படம் வெளியாகும் போது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருப்பது வழக்கம்.

ஆனால் அஜித் நடித்த இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆரவாரம் மட்டுமல்லது அட்ராசிட்டியிலும் ஈடுபட்டது காவல்துறையினரை கடுப்பாக்கியது. அஜித் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.