சட்டசபை, லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது: மாயாவதி

லக்னோ.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபா தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் தனது கட்சி கூட்டணி வைக்காது என்றும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி அறிவித்தார்.

இந்த ஆண்டு கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் 2024-ல் பொது தேர்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை பங்கீட்டுக்கொள்வது மற்றும் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தன்னுடைய 67 வது பிறந்தநாளை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நடந்து முடிந்த பல்வேறு தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் கசப்பான அனுபவங்கள் உருவாகின

இதனை கருத்தில் கொண்டு அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024-ல் லோக்சபா தேர்தலிலும், பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. சில கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்பத் தொடங்கியுள்ளதால், கட்சியின் கொள்கையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.