நேபாளத்தில் ஞாயிறன்று பகல் 72 பேர்களுடன் பயணித்த விமானமானது விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை 68 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபுணர்கள் தரப்பு கருத்து
இந்த நிலையில், நேபாளத்தில் விமான விபத்துகள் அதிகம் ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் நிபுணர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அதில், மோசமான பராமரிப்பு, போதிய பயிற்சியின்மை மற்றும் தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.
@AP
மட்டுமின்றி, மிக ஆபத்தான ஓடு தளங்களையும் நேபாளம் கொண்டுள்ளது. மலை முகடுகள் அதிகமிருப்பதால், விமானிகளுக்கு அது சவாலாக உள்ளது எனவும் கூறுகின்றனர்.
2010ம் ஆண்டுக்கு பிறகு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்து பட்டியல்:
2022 மே 29ம் திகதி Tara Air விமானமானது பொக்ரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்க, 22 பேர் கொல்லப்பட்டனர்.
2019 ஏப்ரல் 14ம் திகதி எவரெஸ்ட் மலை சிகரம் அருகே புறப்பட்ட குட்டி விமானமானது இரண்டு ஹெலிகொப்டர்களுடன் மோதிக்கொள்ள மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் காயங்களுடன் தப்பினர்.
2018 மார்ச் 12ம் திகதி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
@EPA
2016 பிப்ரவரி 24ம் திகதி Tara Air விமானமானது மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2014 பிப்ரவரி 16ம் திகதி அர்ககாஞ்சி மாவட்டத்தில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
2012 செப்டம்பர் மாதம், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி 19 பேருடன் பயணித்த விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அனைவரும் கொல்லப்பட்டனர்.
2012 மே மாதத்தில் இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற அக்னி ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
@reuters
2011 செப்டம்பர் மாதம் 19 பேர்களுடன் பயணித்த குட்டி விமானம் ஒன்று எவரெஸ்ட் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அனைவரும் கொல்லப்பட்டனர்.
2010 டிசம்பர் மாதம் கிழக்கு நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 22 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
2010 ஆகஸ்டு மாதம், ஒரு சிறிய அக்னி ஏர் விமானம் காத்மாண்டு அருகே மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த நான்கு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு பிரித்தானியர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.