காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்புமுறைக்கான தொழில்நுட்பம் – ஒன்றிய அரசு அறிமுகம்

காற்றின் தரத்தைக் கண்காணிக்க அமைப்புமுறைக்கான புதிய தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவோடு செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் உருவாக்கப் பட்டுள்ள காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்புமுறைக்கான தொழில்நுட்பத்தை அமைச்சகத்தின் செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா அறிமுகப்படுத்தினார்.

டெக்ஸ்மின், ஐ.எஸ்.எம் உடன் இணைந்து, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தேசிய திட்டத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள நவீன கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்), சுற்றுச்சூழல் மாசை கண்காணிக்கும் வகையில் வெளிப்புறக் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையத்தை வடிவமைத்துள்ளது.

சுரங்கம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்து வதற்காக இந்த தொழில்நுட்பத்தின் வணிகமயமாக்கலுக்காக ஜே.எம். என்விரோ லேப் தனியார் நிறுவனத்திற்கு காற்று தர கண்காணிப்பு அமைப்புமுறையின் தொழில்நுட்பம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

சி-டாக் மையத்தின் தலைவர் மற்றும் மூத்த இயக்குநர், ஜே.எம். என்விரோ லேப் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் அல்கேஷ் குமார் ஷர்மா, அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புவனேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் புதுதில்லியில் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.