சென்னை: “தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைவில் பதிலளிக்கப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்குப் பிறகு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை, ஆயுஷ் அமைச்சகம், உயர் கல்வித் துறை ஆகிய துறைகளில் இருந்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைக்கு பல்வேறு விளக்கங்களைக் கேட்டு கடிதங்களை எழுதியுள்ளனர்.
கடந்த நான்கைந்து மாதங்களாக அந்த கடிதங்களுக்கு விளக்கங்கள் சட்ட வல்லுநர்களுடன் எல்லாம் கலந்தாலோசிக்கு பதில்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதன்பிறகு மீண்டும், கடந்த 13-ம் தேதி ஒரு வாரத்திற்கு முன்னால் ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஒரு விளக்கம் கோரி கடிதம் வந்துள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு, சட்ட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட அந்த விளக்கத்தில் இருந்து மேலும் ஒரு சிறிய விளக்கம் பெறுவது குறித்து கேட்டிருந்தனர். அதுதொடர்பாக நேற்று விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி விரைவில் பதில் அனுப்பப்படும்” என்று அவர் கூறினார்.