பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு; இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது: காங்கிரஸ்

டெல்லி: பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு, இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் யுபிஎஸ்சி, ரெயில்வே தோ்வு வாரியம், அரசு பணியாளா் தோ்வாணையம் எஸ்எஸ்சி உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை இரண்டு கட்டங்களாக சுமாா் 1.47 லட்சம் பேருக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71,000 பேருக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் மிகவும் குறைவு என்றும் அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பணிநியமனங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எட்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 16 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நரேந்திர மோடி ஜி, அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இன்று நீங்கள் வழங்கும் 71,000 பணிநியமன ஆணைகள் மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 16 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே என்று இளைஞர்களுக்குச் சொல்லுங்கள் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.