பெங்களூரு, ஜன. 21-
பெங்களூரில் கார் பேனட் மீது விழுந்த நபரை, 2 கி.மீ., காரில் இழுத்து சென்ற பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
பெங்களூரின், உல்லாள் பிரதான சாலை ஜங்ஷன் அருகில், பிரியங்கா என்பவர் தன் கணவருடன், நேற்று காலை, ‘டாடா நெக்சான்’ காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது காரும், எதிரே வந்த, ‘மாருதி ஸ்விப்ட்’ காரும் மோதின.
இதனால், பிரியங்காவுக்கும், ஸ்விப்ட் காரில் வந்த தர்ஷன் என்பவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.
காரில் இருந்து இறங்கிய பிரியங்கா, தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது தர்ஷனும், அவரது நண்பர்களும் காரில் இருந்து, ஆவேசமாக இறங்கினர்.
இதனால், பதற்றம்அடைந்த பிரியங்கா காரில் ஏறினார். அவரை தடுக்கும் நோக்கில், அவரது கார் பேனட்டை தர்ஷன் பிடித்துக் கொண்டார்.
அப்போது, பிரியங்கா காரை இயக்கியதால், தர்ஷன் பேனட் மீது குப்புற விழுந்தார்.
ஆயினும் பிரியங்கா விடாமல், 2 கி.மீ., துாரம் காரை வேகமாக ஓட்டினார். தர்ஷன், பேனட்டை கெட்டியாக பிடித்து, அதன் மீது படுத்து கொண்டதால், உயிர் தப்பினார்.
சினிமாவில் வருவது போல நடந்த இந்த காட்சியை கண்டு, மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில இளைஞர்கள், பைக்கில் காரை விரட்டி சென்று மடக்கி நிறுத்தினர்.
கொதிப்படைந்த அப்பகுதியினர், பிரியங்காவின் கார் மீது கற்களை வீசியதில், கண்ணாடிகள் நொறுங்கின.
தகவலறிந்து வந்த ஞானபாரதி போலீசார், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். தர்ஷன், அவரது நண்பர்கள், பிரியங்கா, அவரது கணவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்