நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகிலுள்ள தங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்-பவித்ரா தம்பதியின் 8 வயது மகன் குஷால். குந்தா மின்வாரிய மேல் முகாமிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்குச் செல்வதற்காக வழக்கம்போல குந்தா அணை வழியாக இன்று காலை சென்றிருக்கிறார்.
அணை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், சிறுவன் குஷாலிடம் ஏதோ கோபமாகப் பேசி, அருகில் கிடந்த தடியை எடுத்து சரமாரியாக தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அலறித் துடித்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
உடலில் தடிப்பு காயங்கள் இருப்பதைக் கண்ட பெற்றோர், உடனடியாக சிறுவனை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். சிறுவனைத் தாக்கிய காவலர் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறையினர், “இன்று காலை குந்தா அணை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவந்த காவலர் துரைபாண்டி மதுபோதையில் பள்ளி மாணவனை தாக்கியதாகப் புகார் வந்தது. துரைப்பாண்டி மது போதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவனை தாக்கியது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. காவலர் துரைபாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.