ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7- ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
அண்ணாமலை சந்திப்பு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று (பிப்.3) காலை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய நிலையில், அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.