ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பணப்பட்டுவாடா குறித்து பேசியதற்கு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் தமிழக பாஜக சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் அளித்தார்.
இந்த இரண்டு புகார்கள் மீதும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளிக்குமாறும் தமிழக தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிப்பார்.
அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் வேட்பாளர் மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.